ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மீனாள் (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீனாள் இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவையொட்டி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உதயகுமாரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், MLA., அவர்களுடைய தாயார் திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் உதயகுமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திருமதி மீனாள் அம்மாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.