பஹல்காம் தாக்குதல் எதிரொலி - கனடா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு!
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தளமான பைரசனில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 சுற்றுலா பயணிகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தின் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதிலும் இருந்து ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 90 % குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்லும் Travel Agency உரிமையாளர்கள் தங்களது வேதனையை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கனடா அரச்சாங்கம் தங்கள் நாட்டு மக்களை ஜம்மு - காஷ்மீர் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாடு, இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய எந்தப் பகுதிகளுக்கும் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை பதட்டமாகவே உள்ளது. வன்முறை போராட்டங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் போக்கு இருப்பதால் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்குள் செல்ல வேண்டாம் என்றும் கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.