மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை - அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரம் அருகே குடிசை வீட்டில் ஹெராயின் போதைப் பொருள் பதுங்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாறுவேடத்தில் சென்ற பட்டினம்பாக்கம் தனிப்படை போலீசார் போதை பொருள் வாங்குவது போல நடித்து ஒருவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இரண்டு பேர் தப்பியோட முயன்ற போது இருவரையும் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். பின்னர் குடிசை வீட்டில் ஆய்வு மேற்கொண்ட போது ஓலையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 17.5 கிராம் ஹெராயின் போதை பொருளை போலிசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அலி 25, அசீஸ் 26, இம்ரான் அலி 28 என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் ஹெராயின் போதை பொருளை அசாம் மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும் சென்னையிலும் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா வரக்கூடிய பயணிகளுக்கும், போதையில் ஈடுபடுபவர்களுக்கும் போதைப் பொருள் விற்பனையில் பல மடங்கு லாபம் பெறுவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும் தனியார் நிறுவன கேட் செக்யூரிட்டியாக வேலை செய்வதாகவும், காவல்துறைக்கு சந்தேகம் வராத அளவிற்கு போதைப் பொருளை விற்பனை ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைக்க உள்ளனர்