இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு - பட்டியலின மக்கள் வழிபாடு!
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பட்டியலின சமூக மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோவிலைச் சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, திரெளபதி அம்மன் கோவிலில் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு இருதரப்பினரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. அப்போது பட்டியலின சமூகத்தை சார்ந்த ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி. சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோயில் தினந்தோறும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திறக்கப்படும், வெள்ளிக்கிழமை மட்டும் மாலையில் ஒரு மணி திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.