For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்” - தங்கர் பச்சான் வேண்டுகோள்!

10:45 PM Mar 24, 2024 IST | Web Editor
“சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்”   தங்கர் பச்சான் வேண்டுகோள்
Advertisement

இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை எப்போது வருகிறதோ, அன்று தான் இங்கு உயர்வு வரும் என்று கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

Advertisement

நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டனர்” – அதிமுக மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடும் நிலையில், கடலூரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்கர் பச்சான் பேசியதாவது :

“வாக்கு வாங்குவதற்காக நான் பேசவில்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எத்தனை தலைவர்கள், எத்தனை வாக்குறுதிகள். அனைத்திலும் ஏமாந்துள்ளோம். அந்த கோபம்தான் நான் இன்று இங்கு நிற்கிறேன். மக்களாட்சி முறையை நான் மதிப்பவன். நான் 7 வயதில் பார்த்த கடலூர், 62 வயதிலும் அப்படி தான் உள்ளது. விவசாயியை இதுவரை நினைத்து பார்த்தவர்கள் இருக்கிறார்களா. இனியாவது நினைப்பார்களா? பொங்கல் பண்டிகைக்கு இலவசத்தை விவசாயிக்கு அளிக்கின்றனர். இதை தவிர விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தல் என்பது வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது.

நான் உழைக்கும் மக்களை கடவுளாக பார்க்கிறேன். 'அழகி' என்ற திரைப்படம் வந்த பிறகுதான்  கடலூர், பண்ருட்டி,நெய்வேலி,விருத்தாச்சலம் உள்ளிட்ட ஊர்கள் இருப்பதும், அங்குள்ள மக்களின் நிலை பற்றியும் தெரியவந்தது. எனக்கு பணம் என்பது ஒரு பொருட்டே அல்ல. என் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். 10 அடியில் இருந்த நீர், இன்று 865 அடிக்கு கீழ் உள்ளது. என்.எல்.சி. 44,000 ஏக்கர் விளைநிலங்களை எடுத்துக்கொண்டு, மக்களை அப்புறப்படுத்திவிட்டனர்.

பாமக மாற்றி மாற்றி கூட்டணி வைப்பதாக சொல்கின்றனர். இங்கு உள்ள கட்சிகள் அனைத்தும் கூட்டணி மாற்றி வைக்காமல் இருந்துள்ளனரா? எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இல்லையென்றால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இலவசங்கள் வேண்டாம் என்ற நிலை இங்கு எப்போது வருகிறதோ, அன்று தான் இங்கு உயர்வு வரும். உழைக்கும் மக்களை விட உலகில் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. சின்னம் பார்த்து வாக்களிக்காமல் தகுதியை பார்த்து வாக்களியுங்கள்”

இவ்வாறு கடலூர் தொகுதி பாமக வேட்பாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

Tags :
Advertisement