"என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" - ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை!
மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிசுக்கும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது. மேலும், பட்னாவிஸ் உடனான சந்திப்புகளையும் ஷிண்டே தொடர்ந்து தவிர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தபோது ஜல்னா நகரில் ரூ.900 கோடி ரூபாய்க்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
அந்தத் திட்டத்தை பட்னாவிஸ் அரசு தற்போது நிறுத்திவைத்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"நான் ஒரு சாதாரண கட்சி தொண்டன். ஆனால் நான் பால் தாக்கரேவின் விசுவாசியும் கூட. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். என்னை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 2022-ல் என்னை சிலர் இலகுவாக எடுத்துக் கொண்டனர். நான் அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டேன். சட்டசபையில் எனது முதல் உரையிலேயே தேவேந்திர பட்னாவிஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவார் என கூறினேன். ஆனால் எங்களுக்கு 232 இடங்கள் கிடைத்தன. அதனால்தான் என்னை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறேன்"
இவ்வாறு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.