”என் மீது கோபம் வேண்டாம்” - தந்தையிடம் மன்னிப்பு கோரிய அன்புமணி ராமதாஸ்!
திருவள்ளூர் மணவாள நகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “சமூகநீதி சமத்துவம் ஜனநாயகம் சாதி ஒழிப்பு என்று பேசுவார்கள் முற்போக்கு சிந்தனை எல்லாம் பேசுவார்கள். தந்தை பெரியார் வாரிசு என்று பேசுவார்கள் ஆனால், நடைமுறைப்படுத்துவது என்றால் செய்ய மாட்டார்கள். திமுக அரசு சமூக நீதியின் துரோக அரசாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் உள்ளது. சமூகநீதி அடிப்படையில் ஒரு சில சமூக நீதிக்கு ஆதரவாக இருப்பார்கள்
ஒரு சிலர் சமூக நீதிக்கு எதிராக இருப்பார்கள். ஆனால் மூன்றாம் வகை ஒன்று உள்ளது. எந்த வகை தெரியுமா?அதுதான் திமுக வகை. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு 40 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மாநில அளவிலான 12 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒரு துரும்பு அளவு கூட சமூக நீதிக்காக பங்களிப்பில்லை என்றால் எதற்கு ஆட்சி எதற்கு அதிகாரம். தந்தை பெரியாருடைய வாரிசு, தந்தை கருணாநிதி வாரிசு என வீண் பேச்சு வசனம் பேசுகிறீர்கள் யாரை ஏமாற்றுகிறீர்கள்.
சமூக நீதி கொடுங்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு கொடுங்கள், இட ஒதுக்கீடு கொடுங்கள் பட்டியலின மக்களுக்கு இரண்டு விழுக்காடு அதிகப்படுத்துங்கள். அனைத்து சமுதாயத்திற்கும் படிப்பு கொடுங்கள் வேலை கொடுங்கள் என்று தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சொல்லி வருகிறோம். ஆனால், திமுக அரசு செய்யுமா? நிச்சயமாக செய்யாது. எனக்கு வேலை கொடுக்க வேண்டும். வாழ வேண்டும் இது உரிமை. அதை அரசு கொடுக்க வேண்டும். ஆனால், நிலத்தை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லா நிலத்தையும் பிடுங்கிவிட்டார்கள் படித்து சும்மா இருப்பததால் தான் மாணவர்கள் மாத்திரை போடுகிறார்கள் குடிக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று உறுதி அளித்தார்கள்.காலியாக உள்ள வேலை வாய்ப்பு நிரப்புவோம் என்று கூறினார்கள். ஆனால், திமுக ஆட்சி வந்த பிறகு யாருக்கும் வேலை தரவில்லை. பொது மக்களுக்கு திமுக ஆட்சி துரோகம் செய்யும்.
ஒரு சர்டிபிகேட் வேண்டுமென்றால் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்போம் அனைத்தையும் ஒழிப்போம். இலவசமான தரமான கல்வி பெறுவது உரிமை.பணப் பிரச்னை இருந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கலாம் பணம் இல்லை என்றால் அரசு பள்ளியில் படிக்கலாம். இங்கு மழை வந்தால் ஒழுகும் அந்த நிலை உள்ளது.என்ன ஆட்சி நடத்துகிறீர்கள்? சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிறது. திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது எந்த ஒரு மாற்றமும் இல்லை.
மது விற்பது திமுக தான். இந்த வருடம் 45 கோடி தான் வருமானம் என அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆயிரம் கோடி ஊழல் என்று அமலாக்கத்துறை லேசாக கீரி உள்ளார்கள். அலறடித்துக் கொண்டு அந்த நீதிமன்றம் இந்த நீதிமன்றம் என்று திமுகவினர் திரிகிறார்கள்.மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தொழிற்சாலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. காலம் காலமாக வாழும் இடத்தில் தொழிற்சாலை வருகிறது என்று அரங்காம் அந்த இடத்தை காலி செய்கிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செய்ய உள்ளேன். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்தி வரும். நாம் ஆட்சிக்கு வர வேண்டும், ஆள வேண்டும் என ஒவ்வொரு சவால் எடுத்துக் கொள்ளுங்கள். சமூக நீதிக்கான போராட்டம் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். நடத்த வைப்போம். எனது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது கோபம், வருத்தம், கவலை எதுவும் வேண்டாம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.