”அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்”- தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற அமைப்பை உருவாக்கி, தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார். அண்மையில் பிரதமர் மோடி தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடர்பாக மத்திய அரசை அவா் விமர்சித்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் நாள் அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக உரிமை மீட்புக்குழு விலகுவதாக அறிவித்தார். மேலும்தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதே நாளில் அவர் இருமுறை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
”எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர்கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.