டெல்லியில் யுஜிசி புதிய விதிமுறைக்கு எதிரான திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் - இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்பு
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு குறித்து பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) புதிய வரைவு நெறிமுறைகள் வெளியிட்டது. இந்த புதிய வரைவு நெறிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், யுஜிசி-யின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக, தங்கள் மாநிலங்களின் சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி கேரள மாநில சட்டபேரவையில் யுஜிசி- யின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், யுஜிசி-யின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்பி, வைகோ, துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றி வருகின்றனர்.