திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏன்?
மக்களவைத் தேர்தலில், திமுக - மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் மக்கள் நீதி மய்யம் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
மக்கள் நீதி மய்யத்திற்கு 2 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், கோவை, தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், திமுக கூட்டணியில் டார்ச்லைட் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என கமல்ஹாசன் திட்டவட்டமாக இருப்பதாகவும், ஆனால் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என திமுக நிபந்தனை விதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தான் திமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.