நாளை திமுக பொதுக்குழு கூட்டம் - இரண்டு நாள் பயணமாக மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் திமுக பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 1 மணி அளவில் மதுரை செல்கிறார். விமான நிலையத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் தலைமையில் தி.மு.க.வினர் பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து மாலை 5 மணிக்கு மதுரை மாநகர பகுதிகளில் 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோட் ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை மாநகராட்சிக்கு முதல் மேயர் முத்துவின் வெங்கல சிலையை திறந்து வைக்கிறார். மேலும், முதலமைச்சர் வருகையால் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.