தேர்தல் தொகுதி பங்கீடு : திமுக - மதிமுக இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை!
திமுக – மதிமுக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான 3ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
இதையும் படியுங்கள் : WPL 2024 : மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது யு.பி. வாரியர்ஸ் - நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தல்!
இதில் ராமநாதபுரம் தொகுதி ஐயுஎம்எல் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று தொகுதி பங்கீடு குறித்த 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக சார்பில் மதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் மதிமுகவினர் இரண்டு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு திமுக ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கொடுப்பதாக முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் உடன்பாடு ஏற்படாத நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இன்று காலை 11.00 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.