திமுக - காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?
வரும் மார்ச் 7-ம் தேதி திமுக - காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று முதல் முறையாக மாநிலம் முழுவதும் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை (மார்ச் 3) மாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து, நாளை மறுநாள் (மார்ச் 4) தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், கன்னியாகுமரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் உலக மகளிர் தின மாநாட்டில் பங்கேற்கிறார். மார்ச் 5-ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மார்ச் 6-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மாயவரத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் சென்னை வருகிறார்.
எனவே, மார்ச் 7-ம் தேதிக்கு பிறகு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.