“பாஜகவின் கனவு பலிக்கவில்லை!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பாஜகவின் கனவு பலிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிவிரும் நிலையில் தமிழகத்தில் திமுக 40க்கு 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
“கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 400 இடங்கள் என்று கூறிய பாஜகவுக்கு ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகள் கிடைக்கவில்லை. பாஜகவின் பண பலம் எடுபடவில்லை. பாஜகவின் கனவு பலிக்கவில்லை. திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குவோம் என்று சொல்லியிருந்தோம். இந்த மகத்தான வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, என் உயரம் எனக்குத் தெரியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.