அமெரிக்காவில் கல்வித்துறை கலைப்பு - அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு!
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் பணி நீக்க நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை நிறுத்தியது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க அரசின் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் கல்வித்துறையின் முழு அதிகாரமும் இனி மாகாணங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த உத்தரவு அமெரிக்காவின் கூட்டாட்சி கல்வித் துறையை நிரந்தரமாக நீக்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 1979ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வித்துறையை, காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் கலைக்க முடியாது. ஆனால் அதிபர் டிரம்ப்பின் உத்தரவு கல்வித்துறைக்கான நிதி மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
கல்வித்துறையை முடக்குவதற்கு, கல்வி அதிகாரத்தை மாகாணங்களிடம் திருப்பி வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கல்வித்துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை வலியுறுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.