அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் பாலிடெக்னிக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை - தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேருவதற்காக லேட்ரல் என்ட்ரி முறை உள்ளது. இதில் கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ் 2 முடித்த மாணவா்களும், 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அதன்பின் 2 ஆண்டு ஐடிஐ படித்தவா்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் வணிகவியல் உள்ளிட்ட இதர பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதலாம் ஆண்டு சேரும் வகையில் விதிகள் இருந்தது.
இந்த நிலையில் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழில் நுட்பக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் “தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-26-ஆம் கல்வியாண்டில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயபடிப்பில் சேர்க்கை செய்து கொள்ள அனைத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.