வொர்க் அவுட் ஆனதா விஜயகாந்தின் கேமியோ? படை தலைவன் படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்!
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில், யு.அன்பு இயக்கிய படம் படைதலைவன். ஒரு யானைக்கும், ஹீரோவுக்குமான பாசப்பிணைப்பே இதன் கதை. சண்முகபாண்டியனின் குடும்பத்தினர்
குழந்தை மாதிரி பாசமாக வளர்ந்த யானை திடீரென காணாமல் போகிறது. ஒடிசா காட்டில் வசிக்கும் ஒரு போலிசாமியார் அதை பலி கொடுக்க நினைக்கிறார். ஒடிசா செல்லும் ஹீரோ யானையை மீட்டாரா? என்பதுதான் படத்தின் கரு.
மண்பாண்டம் செய்யும் குடும்பத்தை சேர்ந்த கஸ்தூரிராஜாவின் மகன் சண்முகபாண்டியன். அவரின் குடும்பத்தினர் கடன் பிரச்னையில் சிக்கினாலும் மணியன் என்ற யானையை பாசமாக வளர்க்கிறார்கள். குறிப்பாக, சண்முகபாண்டியன் யானை மீது உயிராக இருக்கிறார். யானையை அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க சிலர் சதி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் யானை ஒடிசா செல்கிறது. அது ஏன் அங்கே செல்லும்? ஹீரோ யானையை வில்லன் கும்பலிடம் இருந்து மீட்டாரா? என்பதுதான் படத்தின் கதை. இன்றைய கால கட்டத்தில் வழக்கமான மசாலா சினிமா கதையை தேர்ந்தெடுக்காமல் இப்படியொரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்த சண்முகபாண்டியனை பாராட்டலாம்.
காரணம், படத்தில் அவருக்கு அதிக பில்டப் சீன், ஹீரோயிச சீன், காதல் இல்லை. ஏன் ஹீரோயினே கதையில் இல்லை. கலர்புல் பாடல்கள், அவருக்கு சோலோ சாங் இல்லை. கதைதான் ஹீரோ. யானையை சுற்றியே காட்சிகள் நகர்கிறது. உயரமான தோற்றம், தெளிவான பேச்சு, தேர்ந்த நடிப்பு என ஹீரோவாக முத்திரை பதித்து இருக்கிறார் சண்முகபாண்டியன். அப்பா பாசம், யானை மீது அன்பு, யானையை பிரிவது, ஒடிசா காடுகளுக்கு சென்று தேடுவது என பல சீ்ன்களில் நடிப்பிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். யானை பின்னணியில் 2 சண்டைக்காட்சிகளில் பின்னி எடுத்து இருக்கிறார். குறிப்பாக, பொட்டு வைத்த தங்க குடம் பாடல் ஒலிக்க, அவர் எதிர்களை அடிப்பது அருமை.
கேப்டன் மகனுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. தந்தையாக வரும் இயக்குனர் கஸ்தூரிராஜா கடனில் தத்தளிக்கிற, அவமானப்படுகிற காட்சிகளில், யானையை மீட்க போராடும் காட்சிகளில் பண்பட்ட நடிகராக மிளிர்கிறார். இனி, நிறைய படங்களில் அவரை பார்க்கலாம். இவர்களை தவிர, ஒரிசா போர்ஷனில் வரும் முனிஸ்காந்த், யாமினி சந்தர், வில்லன்கள் ரிஷிரித்விக், கருடா ராம் நடிப்பும் ஓகே. சின்ன வேடத்தில் வந்தாலும் ஏ.வெங்கடேஷ், யுகிசேது, ஸ்ரீஜித் ரவியும் மனதில் நிற்கிறார்கள். படத்தின் பிளஸ் யானை, கஸ்துாரிராஜா குடும்ப சென்டிமென்ட் சீன் மற்றும் கடைசி அரை மணி நேர கிளைமாக்ஸ்.
சரி படத்தில் மைனஸ் என்ன? கடைசி அரை மணி நேர கிளைமாக்ஸ், யானை சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே விறுவிறுப்பாக உள்ளது. மற்றபடி, திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது. இசை இளையராஜாவா என சந்தேகம் வருகிறது. பாடல்கள், பின்னணி இசை சுமாராகவே உள்ளது. ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார், வசனகர்த்தா பார்த்திபன் படத்தை அழகாக்கி இருக்கிறார்கள். கேப்டன் சில சீன்களில் ஏ.ஐ தோற்றத்தில் வருகிறார். அந்த பில்டப் ஓகே. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அதை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம். இன்னும் அந்த சீனை மெருகேற்றி இருக்கலாம். அப்படி செய்திருந்தார் அதை பெரியளவில் கொண்டாடி இருப்பார்கள்.
அதேபோல், ஹீரோயின், கமர்ஷியல் பாடல், காமெடி இல்லாதது பெருங்குறை. வில்லன்கள் நடிப்பில் செயற்கை தனம் அதிகமாக இருந்தது. யானை சம்பந்தப்பட்ட சீன்களில் உழைப்பு தெரிகிறது. ஆனாலும், சிஜி சீன்களில் அலட்சியம் தெரிகிறது. சண்முகபாண்டியன் தோற்றம், நடிப்புக்கு இன்னும் ஆக் ஷன்சீன்களை, ஹீரோயின் சீன்களை அதிகப்படுத்தி, யானை சம்பந்தப்பட்ட சீ்ன்களில் இன்னும் கொஞ்சம் சென்டிமென்ட்டை பிழிந்து இருந்தால் படம் பெரிய ஹிட்டாகி இருக்கும். கேப்டன் படங்களுக்கு உரிய சண்டைகாட்சி, பன்ச் டயலாக், ஒரு வித கமர்ஷியல் பார்முலா இதில் மிஸ்சிங். கதையில் இன்னும் சிலரை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்து இருக்கலாம். யானையை பிடிக்குமா? கேப்டன் விஜயகாந்த் ரசிகரா? வழக்கமான படமாக இல்லாமல், புதுவித கதையை தேடுபவரா? படை தலைவனை பார்க்கலாம்.
- மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்