ஒர்க் அவுட் ஆனதா அப்பா - மகன் பாசக்கதை?... ராஜபுத்திரன் திரைவிமர்சனம்!
மகா கந்தன் இயக்கத்தில் பிரபு, வெற்றி, கிருஷ்ணப்பிரியா, கோமல்குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி நடிப்பில் வந்திருக்கும் படம் ராஜபுத்திரன். தமிழ் சினிமாவில் அப்பா, மகன் பாசத்தை அடிப்படையாகக்கொண்டு எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அதில் ராமநாதபுரம் மாவட்டம் பின்னணியில், 1990களில் இந்த கதை நடக்கிறது.
ஊரில் நல்ல மனிதரான பிரபு, விவசாயம் பொய்த்து போனதால் பணத்துக்காக கஷ்டப்படுகிறார். அதை உணர்ந்த மகன் வெற்றி, சட்டவிரோதமான ஒரு வித பண பரிவர்த்தனை வேலையில் ஈடுபடுகிறார். அதனால், ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள பாசக்கார மகனை எப்படி காப்பாற்றினார்?. வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டும் என்ற மகனின் ஆசை நிறைவேறியதா?. அவன் காதல் கல்யாணத்தில் முடிந்ததா என்பது படத்தின் கரு.
படத்தின் அப்பா கேரக்டர் என்றாலும் கதை நாயகன் பிரபுதான். அவரும் அதை உணர்ந்து அவ்வளவு எளிமையாக, அவ்வளவு அருமையாக நடித்து இருக்கிறார். வருங்கால மருமகளிடம் பஸ்சில் சண்டைபோடுகிற சீன், மகனுக்காக வில்லனை பந்தாடுகிற சீன், மருமகளை பக்கத்துவீட்டுகாரர்களிடம் அறிமுகப்படுத்துகிற சீன்
கடைசியில் மகன் பணம் அனுப்ப, அதை ஊராரிடம் பெருமையாக சொல்கிற சீன் என பல இடங்களில் தன் பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அப்பாவாக பல இடங்களில் வாழ்ந்து இருக்கிறார். ஹீரோவாக வரும் வெற்றி இதில் வழக்கமான பாதையில் இருந்து கமர்ஷியலுக்கு மாறியிருக்கிறார். சில இடங்களில் அது ஒட்டவில்லை. அவர் காதலியாக வரும் மலையாள வரவு கிருஷ்ணபிரியா யாருப்பா இது என்று கேட்க வைக்கிறார். ராமநாதபுரம் கிராமத்து, வீரபெண்மணியாக மிரட்டியிருக்கிறார்.
காதல், சோக காட்சிகளில் மட்டுமல்ல, கிளைமாக்சில் ஒரு முக்கியமான காட்சியிலும் நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார். வில்லனாக வரும் கோமல்குமார் நடிப்பும், அவர் கேரக்டரும் வித்தியாசமாக தெரிகிறது. இவர்களை தவிர, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி என பலர் இருக்கிறார்கள். தங்கதுரை காமெடி ரசிக்க முடியவில்லை. அந்த கவர்ச்சி பாடல் ஓகே ரகம்.
அந்த கால ராமநாதபுரம் கிராமம், அங்குள்ள மனிதர்கள், வெளிநாட்டு வேலை மோகம், அங்கிருந்து வரும் பணத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பவது, பண மோசடி, அப்பா மகன் பாசம் போன்ற விஷயங்களில் திரைக்கதை ஓகே. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் எதிர்பாராதது. ஆனாலும், சில இடங்களில் போரடிக்கிறது. பிரபு ரசிகர்களுக்கு மட்டும் இந்த படம் அதிகம் பிடிக்கும்.
- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்