முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தருமபுரம் ஆதீனம்! மடத்தின் பெருமையை காத்ததாக அறிக்கை!
தருமபுரம் ஆதீன மடம் தொடர்பான போலி ஆடியோ, வீடியோ விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதினம் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில், மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி சிலர் தங்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர் மீது காவல் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தருமபுரம் ஆதீன நிர்வாகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர்.
இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். தமிழ்நாடு முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
எனவே மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வருக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தருமபுரம் ஆதீன சைவ மடத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.