#Delhi கட்டட விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நான்கு மாடி கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் நேற்று முன்தினம் மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இடுபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 7 வயது சிறுமி உட்பட இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.
இதையும் படியுங்கள் : 3வது டி20 போட்டி | இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி!
மேலும், கட்டட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 இளம் சகோதரிகள் அடங்குவர்.
உயிரிழந்தவர்கள் சாதனா (17), ராதிகா (7), அனில் குப்தா (42), எம்டி சர்ஃபராஸ் (22) மற்றும் எம்டி காதர் (40) என அடையானம் காணப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரபப்பான சூழல் நிலவி வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.