ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் பலி எண்ணிக்கை உயர்வு - பெங்களூர் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!
பல வருட போராட்டத்திற்கு பிறகு, நேற்று(ஜூன்.03) பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதை நேற்றிரவு முதல் அந்த அணியின் ரசிகர்கள் பட்டாசு மற்றும் மேலதாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி என்பதால், பொது இடத்தில் முன்னதாக வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட பெங்களூர் அணி தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது, இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்க இன்று 5 மணியளவில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்த பேரணியில் ஏராளமான பெங்களூர் அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குவியத் தொடங்கியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதுவரை பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் பெரும் அசம்பாவிதத்தை தவிக்கவும் பெங்களூர் அணி ரசிகர்கள் மீது கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.