சி.வி.சண்முகம் எம்.பி. மீது தொடரப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு!
சி.வி.சண்முகம் எம்.பி. மீது தொடரப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகேயுள்ள நாட்டார்மங்கலம் பேருந்து நிலையம்
அருகில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதியும், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரே கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் கடந்த மே மாதம் 1 ஆம் தேதியும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இக் கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட
செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்,
தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவமதிக்கும் வகையிலும் தரக்குறைவாகவும், பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : கௌதமி அளித்த நில மோசடி புகார் | தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் கைது!
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம்,
தனித்தனியாக 3 வழக்குகளை தொடர்ந்தார். இந்த 3 வழக்குகளும் இன்று (டிச.21) விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. ஆஜராகவில்லை. முன்னாள் அரசு வழக்கறிஞர் சங்கரன்
ஆஜராகி, சி.வி.சண்முகம் எம்.பிக்கு உடல்நலம் சரியில்லாததால் ஆஜராகவில்லை என்று கூறி மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை ஏற்ற மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.