For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள் - லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி!

02:05 PM Oct 06, 2024 IST | Web Editor
மெரினாவில் அலைகடலென குவிந்த மக்கள்   லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை வான் சாகச நிகழ்ச்சி
Advertisement

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி உலகத்திலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைத்து லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றது.

Advertisement

இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (அக். 6) மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன. குறிப்பாக, வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக் கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்றன.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. ஆண்டுதோறும் இந்த வான் சாகச நிகழ்ச்சி டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்தது. பின்னர் டெல்லிக்கு வெளியே சண்டிகரில் 2022-ம் ஆண்டும், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டும் நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக சென்னையில் தற்போது நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிடுமாறு விமானப் படை அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சி அதிக மக்கள் கண்டுகளித்த விமான சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை படைத்து ‘லிம்கா சாதனையில்’ இடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்வை காண சுமார் 15 லட்சம் பொதுமக்கள் மெரினாவில் குவிந்ததாக கூறப்படுகிறது.

Tags :
Advertisement