நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் - விவசாயிகள் வேதனை!
தமிழ்நாடு முழுவதும் TNCSC எனப்படும் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன்
மூலமாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நேஷனல் கோப்ரடிவ் கன்ஸ்யூமர் பெடரேஷன் ஆப் இந்தியா எனப்படும் NCCF டெல்டா மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யும் என தமிழ்நாடு அரசு தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து NCCF,TAMILNADU PADI AND RICE PROCESSING AGENCY என்ற தனியார் நிறுவனத்திற்கு நெல் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை வழங்கியது.
இந்த நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்தவுடன் 48 மணி நேரத்தில் அதற்கான பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். நெல் கொண்டு செல்லப்படும் குடோன் ரைஸ்மில் ஆகியவற்றின் தகவல்களை உடனடியாக விவசாயிகள் மற்றும் TNCSC க்கு வழங்க வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் கீழ் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நெல் எடுத்துச் சென்ற நிறுவனம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை விவசாயிகளுக்கு பணம் செலுத்தாமல் பணத்தை நிலுவையில் வைத்துள்ளது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளின் பணம் நிலுவையில் இருக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று உரக்கடையில் கடன் பெற்று பல்வேறு கடன் சுமைகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் இந்த பணம் முடங்கியுள்ளதால் பெரும் அவதிக்கு அழைக்கின்றனர். வாரந்தோறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களில் இது குறித்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் தீர்வு மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.