"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்" - அண்ணாமலை
நீண்ட தூர பயணங்களுக்கான ரயில் டிக்கெட் விலை ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்களுக்கு கி.மீ.க்கு ரூ.2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்களுக்கு கி.மீ.க்கு ரூ.1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல் 500 கி.மீ. மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாக உயர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, ரயில் கட்டண உயர்வு குறித்து பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் மக்களின் மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்" என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவு குறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக அமையாது என்று தெரிந்து, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார். ரயில் கட்டணமானது, புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
தினந்தோறும், தங்கள் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை. தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காத முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்"
இவ்வாறு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.