Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Crime: முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவன் கொலை - உடலை வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த எதிர் வீட்டுப் பெண் கைது!

10:28 AM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியில் 3 வயது சிறுவனைக் கொன்று, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினில் மறைத்து வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி பகுதியை சார்ந்தவர் கூலித் தொழிலாளி விக்னேஷ். மூன்று வயதான இவரது 2-ஆவது மகன் சஞ்சய், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று 9 மணி அளவில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என குடும்பத்தினர் தேடியுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடிய நிலையில் சிறுவன் கிடைக்காததால், நீர் நிலைகளில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்து, அப்பகுதியை சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் தேடியுள்ளனர்.

தொடர்ந்து சிறுவன் குறித்த தகவல் ஏதும் கிடைக்காததால், ராதாபுரம் காவல்
நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட
காவல்துறையினர் எதிர்வீட்டு பெண்மணி தங்கத்திற்கும், விக்னேஷ் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தங்கத்தின் வீட்டிற்குள் சென்று சிறுவன் இருக்கிறானா? எனத் தேடினர். ஆனாலும் அவர்களால் சிறுவன் குறித்த எந்த தகவலையும் பெற முடியவில்லை.

இதனையடுத்து தங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவர் முன்னுக்குப்
பின் முரணாக பேசுவதை அறிந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணை தீவிரமானதையடுத்து, சிறுவனை கொலை செய்ததை தங்கம் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்து, சாக்கு முட்டையில் கட்டி தனது வீட்டில் உள்ள துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் மறைத்து வைத்தது தெரியவந்தது.

சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு பரிசோதனைக்காக ராதாபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தங்கத்தை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் 40 வயதான தங்கம், கடந்த சில
மாதங்களுக்கு முன்பு தனது மகனை இழந்துள்ளார். விபத்து ஒன்றில் சிக்கி அவரது மகன்
உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாக
கூறப்படுகிறது. இதற்கிடையே எதிர்வீட்டு விக்னேஷ் குடும்பத்திற்கும், தங்கம் குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்த நிலையில், அவர்கள் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை சகித்து கொள்ள முடியாத தங்கம், சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மூன்று வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆத்துகுறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் நேரில் விசாரணை நடத்தினர்.

Tags :
ArrestCrimemurder caseNellaiNews7Tamilnews7TamilUpdatesPolice
Advertisement
Next Article