கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க சித்தராமையா உத்தரவு!
கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரணபிரகாஷ் பட்டீல், தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சர் சித்தராமையா பேசியதாவது,
"கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் பயப்பட தேவை இல்லை. இனி வரும் நாட்களில் கொரோனாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பேசியவர், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், சுவாச பிரச்சினை உள்ளவர்கள் முககவசம் அணியவேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், வாரந்தோறும் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனை நடத்தி நிலையை கண்காணிக்க வேண்டும்.
அதே சமயம், பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் கொரோனா உதவி மையத்தை திறக்க வேண்டும். வரும் நாட்களில் விமான நிலையங்களில் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அலட்சிய மனப்பான்மையுடன் இருக்க கூடாது, அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறையில் வெளியூர் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது. மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.