தொடர் கனமழை!... மணிமுத்தாறு அணையிலிருந்து 10,000 கன அடி நீர் திறப்பு…
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவி வருவதால்,கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. நாளை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வரும் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்தமிழகம், வடதமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு - மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால்
வரும் 19-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 108 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடி ஆகவும் நீர்திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி நீர் ஆகவும் உள்ளது.