Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி" - மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
01:36 PM Jun 22, 2025 IST | Web Editor
2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement

மதிமுகவின் 31வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று (ஜூன்) நடைபெற்றது. மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளார் துரை வைகோ, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பொதுக்குழுவில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம்: 1

தமிழ்நாட்டு அரசியல் அரங்கத்தில் 32 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியோடு தனது லட்சியப் பயணத்தைத் தொடர்கிறது.

தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக சமரசம் இன்றி போராடி வரும் மறுமலர்ச்சி திமுக தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் அரணாகத் திகழ்கிறது.

திராவிட இயக்கத்திற்கு எதிரான சக்திகள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முனைந்து வரும் சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக 2017 ஆம் ஆண்டிலிருந்து எடுத்த முடிவை எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து கடைபிடிப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 2

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கிறது தமிழ்நாடு. 2024-25 இல், ‘உண்மையான பொருளாதார வளர்ச்சி’யில் 9.69 சதவீதத்தைத் தொட்டு, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2032-33 இல் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை அடையத் திட்டமிட்டுவரும் தமிழ்நாடு அரசு, அதை நோக்கிய பயணத்தில் உறுதியாக நடைபோடுவதை இந்தச் சாதனை உறுதிசெய்கிறது.

மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023-24 இல் ரூ.15.71 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கடந்த 2024-25 இல் ரூ.17.24 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் நிலையான விலைமதிப்பின்படி இது 9.69 % வளர்ச்சி ஆகும். சேவைகள் துறை (12.7 %), இரண்டாம் நிலைத் துறை (9 %) ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இதற்கு முக்கியப் பங்களித்திருக்கிறது.

மத்திய அரசு கடந்தாண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநிலங்களின் மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு 13 துறைகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னணியாக வகைப் படுத்தப்பட்டுள்ளது.

அதில் நிதி ஆயோக் அறிக்கைபடி 11 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தமிழ்நாட்டின் மதிப்பெண் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமை திறனோடு வழிநடத்தும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று மதிமுக பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 3

மறுமலர்ச்சி திமுக உதயமானதிலிருந்து 1996, 2001, 2006, 2016, 2021 ஆகிய ஐந்து சட்டமன்ற தேர்தல்களிலும், 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய எட்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டிருக்கிறது. 1997 ஆம் ஆண்டு முதல் 2010 வரையில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக திகழ்ந்தது. எனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில், கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 4

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடி வரும் மறுமலர்ச்சி திமுக, இந்த ஆண்டு அறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்துவது என்று கட்சியின் தலைமை முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விடிய விடிய பேரணி, மாநாடுகள் என்று மறுமலர்ச்சி திமுக தான் வரலாறு படைத்திருக்கிறது.

எனவே திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளவாறு மண்டல வாரியாக கழகச் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 5

திராவிட இயக்க லட்சியங்களை, கொள்கைக் கோட்பாடுகளை வருங்கால தலைமுறை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மறுமலர்ச்சி திமுக பயிற்சிப் பாசறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி, பொறியாளர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கு 2025 ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையில் மண்டல வாரியாக திராவிட பயிலரங்கம் நடத்துவது என்று பொதுக்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம்: 6

கீழடியில் நடந்த முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது, கடந்த 2024 டிசம்பர் மாதம், இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “2015, 2016-இல் நடைபெற்ற கீழடி முதல், 2-ஆம் கட்ட அகழாய்வு - அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டே மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களை கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

முழுமையான ஆய்வுக்கு பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும்” என்று தெரிவித்திருந்தார். கீழடியில் 1, 2, 3ம் கட்ட அகழாய்வு பணிகளை மத்திய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2ம் கட்ட முடிவுகள் வெளியாகவில்லை. முதல் மற்றும் 2ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024 , பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. 14 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறுசீரமைத்து சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) உத்தரவிட்டது. இது தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு, அறிக்கையை “மேலும் நம்பகத்தன்மை” கொண்டதாக மாற்றும்படி கோரியது.

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடியில் பண்டைய நாகரிகத்தின் தடயங்களை வெளிக்கொணர்ந்ததில் முக்கியப் பங்காற்றியவர். அவர் தயாரித்த 982 பக்க அறிக்கை, கீழடி அகழாய்வு தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிமக்கரி (Charcoal) மாதிரிகளின் கார்பன் டேட்டிங் (Carbon dating) மூலம், அந்தப் பகுதி கி.மு. 200 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பல கலைப்பொருட்கள், தமிழ்நாட்டில் ஒரு நகர்ப்புற நாகரிகத்தின் இருப்பை சுட்டிக்காட்டுகின்றன.

இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு 800 முதல் கி.பி.500 என உறுதி செய்யப்பட்ட பிறகே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தம் தேவையில்லை என்றும் அவரது கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் நடவடிக்கை கீழடி அகழாய்வு முடிவுகளை இருட்டடிப்பு செய்து வேதகால நாகரிகத்தை தூக்கிப் பிடிக்கும் கூட்டத்தின் உள்நோக்கத்தை புலப்படுத்துகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்புத் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது, என்கிற ஆய்வு முடிவை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.

ஆனால், கீழடி தமிழ் நாகரிகத்தை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசு, இல்லாத சமஸ்கிருத நாகரிகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்; ஆரியர்கள்தான் பூர்வகுடிகள்; வேத இதிகாச புராணங்கள்தான் இந்தியாவின் வரலாறு என நிறுவத் துடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய பாஜக அரசு, தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என்று இந்தி ஆதிக்கத்தையும், சமஸ்கிருத பண்பாட்டையும் நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும் எதிரானது.

பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும் என்பதை மதிமுக பொதுக்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 7

சொந்த நாட்டின் தலைநகரான டெல்லியிலேயே தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலை எண்ணி மனம் குமுறுகிறது. தெற்கு தில்லியின் ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் என்ற பெயரில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் குடியேறி வசித்து வருகின்றனர். 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த இவர்கள் அனைவரும் ஏழை எளிய மக்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பிழைப்புக்காக குடியேறியவர்கள் தற்போது யமுனை நதியின் பிரதான மழைநீர் வடிகால் பகுதியை இவர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகக் கூறி, டெல்லி உயர்நீதிமன்றம் இவர்களது வீடுகளை இடித்து வெளியேற்ற உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லி மாநில பாஜக அரசு காவல்துறையின் துணையோடு தமிழர் குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. தமிழர்களின் நலன் குறித்து பேசும் பாஜகவைச் சேர்ந்தவர்கள், இவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 370க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் 180 குடும்பங்களுக்கு மட்டுமே 40 கிலோ மீட்டருக்கு அப்பால் வீடுகள் ஒதுக்கப்பட்டுள் ளன. அந்த வீடுகளில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. மேலும் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எந்த மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. பெரும்பாலான குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் எந்தவிதமான ஆவணமும் இல்லை என்று கூறி மாற்று இடம் ஒதுக்கக்கூட மறுக்கிறது டெல்லி மாநில பாஜக அரசு.

மதராசி கேம்ப் பகுதியில் வசித்த அனைவரும் அன்றாடம் உழைத்து பிழைக்கும் எளிய மக்கள். இந்தக் குடும்பங்களின் வீடுகளைப் பறித்து விரட்டியடித்தால் அவர்கள் எங்கே செல்வார்கள்? வீட்டை நினைத்து கவலைப் படுவார்களா? அல்லது பறிபோகும் வேலையை நினைத்து கண்ணீர் வடிப்பார்களா? இந்திய நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும் பணக்காரர்களும் செய்யும் ஆக்கிரமிப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால் ஏழை எளிய மக்கள் என்றால் புல்டோசர்கள் கொண்டு அவர்களது வீடுகள் தகர்க்கப்படுகின்றன. குடியிருப்புகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் மதராசி கேம்ப் மக்களுக்கு நியாயம் கிடைத்திட அனைத்துப் பகுதி மக்களும் குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளது. அதே நேரத்தில் டெல்லி மாநில நிர்வாகத்திடம் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என மதிமுக பொது குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 8

உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 9

இந்தியாவில் மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்கவும் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1974 ஏப்ரல் 16 ஆம் நாள் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிறைவேற்றினார்கள். 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு உயர்நிலைக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசுக்கு மதிமுக நிர்வாக குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் செல்ல வேண்டிய திசை வழியை தீர்மானிக்கக் கூடிய வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுய ஆட்சிக் கோட்பாட்டின் அவசிய தேவையை வலியுறுத்தி உரையாற்றி உயர்நிலைக் குழுவையும் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கட்சி நிர்வாகக் குழு பாராட்டுகளை நன்றியை உரித்தாக்குகிறது.

தீர்மானம்: 10

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் பாஜக இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை உரிமைகள் ஏதுமற்ற இரண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் உச்சமாக இஸ்லாமியர்கள் மீது இதுவரை இல்லாத வகையில் பயங்கரவாதத் தாக்குதலை தொடுப்பதற்கு ஏதுவாக, வக்ஃப் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவில், தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவைச் சார்ந்த பாஜக உறுப்பினர்கள் முன்வைத்த 14 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு முன்பை விட மேலும் அபாயகரமானதாக இச்சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஏப்ரல் 3-ஆம் தேதி அதிகாலையிலும், மாநிலங்களவையில் 4-ஆம் தேதி அதிகாலையிலும் “வக்ஃப் திருத்த மசோதா 2024”-யை எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடுத்த நாளே ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்” (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் இறையருளை நாடி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தானமாக வழங்கும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இச்சொத்துகளில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களும் உள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, வக்ஃப் வாரியத்திடம் இந்தியா முழுவதும் சுமார் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. அவை 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன.

வக்ஃப் சொத்துகளை நிர்வாகம் செய்வதில் பல முறைகேடுகள் நடக்கின்றன. அவற்றை முறைப்படுத்துவதற்காகவும் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காகவுமே வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறுகிறது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து சி.ஏ.ஏ., முத்தலாக் தடை சட்டம், லவ் ஜிகாத் தடை சட்டம், மத மாற்ற தடைச் சட்டம், தூக் ஜிகாத் சட்டம், பொது சிவில் சட்டம் என சட்டப்பூர்வமாகவும்; பசு பாதுகாவலர்கள், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மூலமும் நாள்தோறும் பல்வேறு தாக்குதல்களை இஸ்லாமியர்கள் மீது பாஜக கும்பல் தொடுத்து வருகிறது.

இஸ்லாமியர்களின் வீடுகளை அழித்து அவர்களை அகதிகளாக மாற்றுவதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுதினமும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை தொடுத்துவரும் மோடி கும்பல் ஏழை இஸ்லாமியர்களின் நலனுக்காக வக்ஃப் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறுவது எள்ளளவும் உண்மையில்லை. சி.ஏ.ஏ., பொது சிவில் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமை, தனியுரிமை போன்றவற்றை பறிப்பதுபோல, வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளை பறித்து பொருளாதார ரீதியாக அவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் உள்ள சில அம்சங்களை பரிசீலித்தாலே, இதனை புரிந்துகொள்ள முடியும்.

எனவே, வக்ஃப் திருத்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி, இந்து, கிறித்துவம் உள்ளிட்ட மதங்களைச் சார்ந்த நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களின் கடமையாகும். மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து மத்திய அரசை பின்வாங்க வைத்திருப்பது விடாப்பிடியான, உறுதியான, போர்க்குணமிக்க களப் போராட்டங்களே ஆகும். இதைப்போலவே வக்ஃப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டுமென்று மதிமுக பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 11

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் மாதம் தொடங்கும் என்றும், இரண்டு கட்டங்களாக அது நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 4 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948, மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990 ஆகியவற்றின்படி இவை நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
DMKElection 2026Latest NewsMDMKMK StalinTN NewsVaiko
Advertisement
Next Article