"லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுவரை மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் உங்கள் அரசால், உங்கள் காவல்துறையால் தனது கனவனை இழந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறார். மீனாவுக்கு உங்களிடம் இருந்து பதில் வருமா?
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கும் நீங்கள் அவசர கதியில் கொடுத்த வேலை மற்றும் நிலம், தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர். லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும் இல்லை!
இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.