குவைத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு!
குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார்.
04:07 PM Jan 26, 2025 IST | Web Editor
Advertisement
கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஜூனைது, முகமது யாசின், திருவண்ணாமலையைச் சேர்ந்த கவுல் பாட்ஷா ஆகியோருடன் வெளிமாநில இளைஞர் ஒருவரும் குவைத் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் குவைத் நாட்டில் பாலைவனப் பகுதியில் தங்கியிருந்தபோது கடும் குளிர் காரணமாக தங்கியிருந்த அறையில் தீ மூட்டி தூங்கியுள்ளனர்.
அப்போது நெருப்பு அணைந்து ஏற்பட்ட புகையால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு முகமது ஜூனைது, முகமது யாசின், வெளிமாநில இளைஞர் ஆகிய மூவரும் உயிழந்தனர். நல்வாய்ப்பாக இதில் கவுல் பாட்ஷா உயிர் தப்பினார். இச்சம்பவம் அறிந்த முகமது ஜூனைது மற்றும் முகமது யாசின் உறவினர்கள் வேதனையுடன் உடலை மீட்டு வர இயலாததால் தமிழ்நாடு அரசிடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement
இந்த நிலையில் உயிரிழந்த தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்,
“ கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 19ஆம் தேதியன்று காலையில் தங்கியிருந்த அறையில் கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தீ மூட்டியதாகவும், தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்பு அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர்.
இருவரின் உடல்களும் கடந்த 22ஆம் தேதி குவைத் நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.