விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் சிறு,குறு நில உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, இறுதிச்சடங்கு நிவாரணத்தொகை, கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் தமிழ்நாடு 2025-26ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதன்படி,
1. நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும்,
2. விபத்தினால் ஏற்படும் உடல், உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் ரூபாயாகவும்,
3. இயற்கை மரணத்திற்கான நிதி உதவி ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும்,
4. இறுதி சடங்கு நிதி உதவி ரூ.2,500-லிருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.