தொடர்ந்து தள்ளிப்போகும் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை துவக்கம் - பயணிகள் அதிருப்தி!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. சென்னை புறநகர் பகுதியை இணைப்பதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புறநகர் ரயிலில் ஏ.சி பெட்டிகளை இணைக்க உள்ளதாக கடந்த வருடம் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த பணிகள் நடப்பு ஆண்டில் இம்மாதம் (ஏப்ரல்) முடிவடைந்த பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏசி ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பாம்பன் பாலம் திறப்பு விழாவோடு சேர்த்து இதைத் தொடங்கலாம் என திட்டமிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தேதி தொடர்ந்து தள்ளிப் போவதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
VIPக்கள் தேதி கிடைக்காததால் குளிர்சாதனப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தென்னக ரயில்வே தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதி மும்பையில் 14 புதிய AC மின்சார ரயில் சேவைகள் தொடங்கப்பட்டாலும், சென்னை ரயில் இன்னும் தாம்பரம் பணிமனையிலேயே இருக்கிறது.
மே மாதம் தொடங்கும் முன்பு வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.