கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!...
கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது.
கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை தரம் பிரித்து அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது.
இதனால் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடமருகே தீ பற்றி இருந்துவருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இப்போது தெரியவில்லை. விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே குப்பைக் கிடங்கால் துர்நாற்றம் ஏற்படுவதால் பல்வேறு தீங்குகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வரும் நிலையில், தற்போது தீ விபத்தால் புகை கிளம்பி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.