For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை கார் வெடிப்பு சம்பவம் | தமிழ்நாட்டில் 20க்கு மேற்பட்ட இடங்களில் NIA சோதனை...!!

08:31 AM Feb 10, 2024 IST | Web Editor
கோவை கார் வெடிப்பு சம்பவம்   தமிழ்நாட்டில் 20க்கு மேற்பட்ட இடங்களில் nia சோதனை
Advertisement

2022ல் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று காலை சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Advertisement

கடந்த  2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே கைதான 6 பேர் உள்பட கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரும்,  அசாருதீன் என்பவரையும்  என்ஐஏ கைது செய்துள்ளது.


இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் 20 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உக்கடம் அல் அமீன் நகரில் ஏ.சி மெக்கானிக் ரகுமான் என்பவர் வீடு உட்பட  கோவையில் மட்டும் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.

இரண்டு கார்களில் வந்த ஏழு அதிகாரிகள் உக்கடம் அல் அமீன் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement