சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் - மதுரை அங்கன்வாடி பணியாளர் மீது அதிரடி நடவடிக்கை!
மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று(ஜூன்.06) காலை அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்படும் சத்துமாவு உருண்டை வழங்கப்பட்டுள்ளன.
இதனை உண்டு கொண்டிருந்தபோது திடீரென ஒரு சத்துமாவு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்த சிறுமி அவரது தாயாரிடம் சத்துமாவு உருண்டைக்குள் பூச்சி இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் பதட்டமடைந்த சிறுமியின் தாயார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லை என கூறியதால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிய நிலையில் தற்போது சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மதுரையில் அங்கன்வாடியில் நடந்த இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திது.
இந்த நிலையில் சத்துமாவு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் குழந்தைகளுக்கு கொடுத்த அங்கன்வாடி பணியாளர் கோமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட திட்ட அலுவலர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.