சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அருள் புரிந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா எப்ரல் 29ஆம்
தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வரும் மே 6-இல் பட்டாபிஷேகம், 7 இல் திக் விஜயம், 8 இல் திருக்கல்யாணம், 9 இல் திருத்தோரோட்டம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் நான்காம் நாள் காலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் வில்லாபுரம் பாகற்காய் மண்டபடியில் எழுந்தருளும் திருவீதி உலா நடைபெற்றது.
சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஒரு தங்கப்பல்லக்கில் மற்றொரு தங்கப்பல்லக்கில் மீனாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனைகள் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்மனும் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு கிழக்குச் சித்திரை வீதி, மீனாட்சி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, தொட்டியன் கிணற்றுச்சந்து, சின்ன கடை தெரு, தெற்கு வாசல் வழியாக வில்லா புரத்தில் உள்ள பாகற்காய் மண்டபப்படியில் எழுந்தருளினர்.
திருவீதி உலா செல்லும் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்தனர். சுவாமி, அம்மன் திருவீதி உலாவை முன்னிட்டு மருரை மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.