”முதலீடுகளை ஈர்த்து மன நிறைவுடன் திரும்பி உள்ளேன்” - தாயகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 30-ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டார்.
ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிறுவனங்களுடன், ரூ.15,516 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டிற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது,
”ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து மன நிறைவுடன் திரும்பி உள்ளேன்.தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நிறுவனங்கள் முதலீடுகள் செய்துள்ளன. இதுவரை சென்ற பயணங்களிலேயே சிறப்பான பயணம் இது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்கான எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்பி வருகின்றனர்”
என்று தெரிவித்தார்.