தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
இதில் ராமநாதபுரம் தொகுதி ஐயுஎம்எல் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போல மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் மநீம கட்சிகளுக்கு இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். காங்கிரஸ், விசிக, மதிமுக உடன் இன்னும் தொகுதி பங்கீடு இறுதியாக நிலையில் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.