மதுரையில் முன்னாள் மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.45 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். தொடர்ந்து, இன்று மதியம் 1.05 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் அளித்த வேஷ்டி, சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, அவனியாபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையம் திருமலை நாயக்கர் சிலை வரை 22 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடைபெற்றது.
பின்னர், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மெஜிரா கோட்ஸ் ஆலை முன் அமைக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரான முத்துவின் வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் மற்றும் மேயர் முத்து குடும்பத்தினர் பங்கேற்றனர். கடந்த 1971 மற்றும் 1978 ஆகிய ஆண்டுகளில் இரு முறை மதுரை மாநகராட்சியின் மேயராக முத்து பதவி வகித்தார். தொடர்ந்து, கடந்த 1999 ஆம் மேயர் முத்துவிற்கு இப்பகுதியில் சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.