உதகை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் உதகைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது. எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மருத்துவமனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க வந்தேன். தினசரி 1300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதைப்போல் சிறப்பான முதல் உதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவரும் தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர். பணத்தை செலவு செய்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உதகை அரசு மருத்துவக் கல்லூரி மக்களின் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், மருத்துவ கல்லூரி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உரையாடினேன். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.