மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில், ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார கார்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து முதல் கார் விற்பனையை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கனிமொழி எம்.பி. , வின்பாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.