For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள், சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்!!

07:42 PM Nov 16, 2023 IST | Web Editor
முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள்  சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்
Advertisement

முதல்முறையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அதே கல்வி நிறுவனங்களில் படிக்க பறவை திட்டம் மூலம் உதவி செய்து சென்னை காவல்துறை ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

Advertisement

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 24 வயதுக்குட்பட்ட முதன் முதலாக சிறிய வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விதமாக, ஆலோசனைகள் மற்றும் தொழிற் பயிற்சிகள் அளித்து வாழ்வில் முன்னேற்றும் வழிகாட்டியாக செயல்பட 'பறவை' என்ற திட்டம் கடந்த 28-03-2022 அன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த பறவை திட்டத்தின் முக்கியமான நோக்கமானது, 24 வயதுக்குட்பட்ட முதல் தடவை குற்றம்புரிந்த இளம் குற்றவாளிகளுக்கு மனநல ஆலோசனை, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை, மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை, சட்ட உதவி, தொழில் வழிகாட்டுதல், அவர்களது திறமையை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பயிற்சி வகுப்பு அளித்து தக்க வேலை வாய்ப்பு பெற உதவி செய்தல், வாழ்வை நலமாக்க சிறையிலேயே முறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி சமுதாயத்தில் சரியான பாதையில் கொண்டு செல்ல அவர்களை நல்வழிபடுத்துவதாகும்.

இப்பறவை திட்டத்தின் மேற்பார்வை அதிகாரியாக தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் நியமிக்கப்பட்டு அவரது மேற்பார்வையில், 30 காவல் சரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 30 காவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து சிறைத்துறை சமூக நல பாதுகாப்பு துறை,தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மனநல காப்பகம் ஆகிய அரசு துறைகளில் இதற்கென ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு, PRISM என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையரகம் கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற பறவை திட்டம் பங்குதாரர்கள் ஆய்வு கூட்டத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் .பி.என்.பிரகாஷ் கலந்து கொண்டார்.

பறவைகள் திட்டத்தின் கீழ் இதுவரை சைதாப்பேட்டை கிளைச்சிறையில்
418 இளங்குற்றவாளிகளும் மற்றும் கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் 116 இளஞ்சிறார்கள் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் காவலர்கள் மூலமாக 418 இளங்குற்றவாளிகளில் 244 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் மற்றும் 100 நபர்களுக்கு ஏற்கனவே படித்த கல்லூரியில் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 116 இளஞ்சிறார்களில் 31 நபர்களுக்கு வேலை வாய்ப்பும், 24 நபர்களுக்கு ஏற்கனவே படித்த பள்ளியிலும், 07 நபர்களுக்கு ஏற்கனவே படித்த கல்லூரியில் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்து அவர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் காவல் உயரதிகாரிகள், தன்னார்வு தொண்டு நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement