இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள பகுதிகள், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் மே 2ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தென்காசி
திருநெல்வேலி
லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கன்னியாகுமரி
விருதுநகர்
தேனி
ராமநாதபுரம்
தூத்துக்குடி