இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (ஜூலை 24) காலை 05:30 மணி அளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேலும், மகாராஷ்டிரா - கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ”தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். என்று தெரிவித்துள்ளது.
மேலும் “இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.