சாம்பியன்ஸ் டிராபி | இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா? அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்!
8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அரையிறுதி போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று எந்த அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தோல்விக்கு இந்திய அணி பழி தீர்க்குமா? எனவும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.