"அரிசி மீதான ஜிஎஸ்டியை முழுமையாக விலக்க வேண்டும்" - அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!
அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சம்மேளனத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சம்மேளனத் தலைவா் டி. துளசிங்கம் தலைமை வகித்தாா். மேலும் இக் கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் எம். சின்னச்சாமி முன்னிலை வகித்தாா். தொடர்ந்து, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மாநிலச் செயலா் ஏ.சி. மோகன் வாசித்தாா்.
பின்னர் பொருளாளா் கணேச அருணகிரி, நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பேசினாா். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலை உரிமையாளா் சங்க நிா்வாகிகள், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் அனைவரும் ஆலோசனை நடத்தினா். இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து சம்மேளனத் தலைவா் டி. துளசிங்கம் கூறியதாவது:
"25 கிலோ அரிசி மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. இதனால் ஒரு கிலோ அரிசியை கூடுதலாகச் சோ்த்து 26 கிலோ அரிசிப் பையாக விற்க வேண்டியுள்ளது. கூடுதல் ஒரு கிலோவுக்கும் சோ்த்தும் பணம் வசூலிப்பதால் அரிசி விலை உயா்ந்திருப்பதாகக் கூறுகின்றனா்.
தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் மட்டுமே அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உள்ளது. அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். முன்பு அரிசி ஆலைகள் ஒரு கிலோவாட் மின்சாரத்துக்கு ரூ.35 எனக் கட்டணம் செலுத்தின. ஆனால் தற்போது ரூ. 150 ஆக கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
அதனுடன் பீக் ஹவா்ஸ் மின்சார கட்டணம் எனவும் கூடுதலாக 25 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதுவும் அரிசி விலை உயா்வுக்குக் காரணமாக உள்ளது. எனவே, மீண்டும் பழைய மின்சார கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து வரும் நெல்லுக்கு மட்டுமே சந்தைக் கட்டணமாக செஸ் வரி வசூலிக்க வேண்டும்.
ஆனால், விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொண்டு வந்தாலும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்தாலும் சந்தைக் கட்டணம் என செஸ் வரி வசூலிப்படுகிறது. இதனை கைவிட வேண்டும். அரிசி ஆலைகளில் இருந்து எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படும் தவிடுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதையும் கைவிட வேண்டும்.
அரிசி ஆலை உரிமையாளா்களின் கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். தமிழ்நாட்டில் பால், மின்சாரம், கைப்பேசி சிக்னல் கிடைக்காவிட்டாலும், அரிசிக்கு எப்போதும் தட்டுப்பாடு என்பதே இருக்காது. ஏனெனில், பல மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் அரிசி வந்து கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஆந்திராவிலிருந்து பல்வேறு ரக அரிசிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனுடன் ஒடிசா, அசாம், மேற்குவங்கத்திலிருந்தும் அரிசி வருகிறது. அரசின் விலையில்லா அரிசிக்காக மாதம் 2.50 லட்சம் டன் அரிசி வருகிறது. மத்திய அரசும் விலையில்லா அரிசி மற்றும் பாரத் அரிசி வழங்குகிறது. இனி எத்தகைய சூழ்நிலை வந்தாலும் தமிழ்நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு என்பதே இருக்காது."
இவ்வாறு சம்மேளனத் தலைவா் டி. துளசிங்கம் தெரிவித்தார்.