ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை - ரயில்வே நிர்வாகம்..!
இந்தியாவில் பரவலான மக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த நாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 20ல் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் பணி அல்லது படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்கா வெளியூர்களில் தங்கியுள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவர். அப்போது பட்டாசு, புத்தாடைகள் மற்றும் பரிசுப்பொருட்களை எடுத்து செல்வர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அதிக அளவில் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 21 வரை கூடுதல் பயணச்சீட்டு பதிவு சாளரங்கள், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை விரைவாக இயக்க கூடுதல் ஊழியர்கள், ரயில் நிலையங்களில் தேவையில்லாத கூட்டத்தை தவிர்க்க நுழைவு வாயில்களில் தீவிர பயண சீட்டு பரிசோதனை ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், தமிழக ரயில்வே காவல்துறை பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வார்கள். பயணிகளின் பாதுகாப்பாக பயணத்தை உறுதி செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பையும் ரயில்வே நிர்வாகம் நாடுகிறது. அந்த வகையில் ரயில்களில் பயணத்தின் போது ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகள், வெடிப் பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இதை மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ரயில்களின் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள் தங்களின் பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்வே சட்ட திட்டங்களை கடைப்பிடிக்கும்படி ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.