"குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது" - ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கு காலை 10:30மணிக்கு ஒத்திவைப்பு!
"குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய முடியாது" என கூறி ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடர்ந்த வழக்கினை காலை 10:30மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி பவானி சுப்புராயன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தொடர்ந்த வழக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி பவானி சுப்புராயன் விசாரித்தார்.
கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி அனுமதி மறுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவியின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாக நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பதிலளித்த நீதிபதி பவானி சுப்புராயன் “ ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. கட்சி அலுவகம் உள்ள பகுதி நெருக்கடியான பகுதி, சிறிய சாலையாக உள்ளது. எனவே மணிமண்டபம் கட்ட போதுமானதாக இடமாக இருக்காது. ஒருவருக்கு மரியாதை செலுத்துவதாக கூறி, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு தொந்தரவு செய்ய கூடாது” என தெரிவித்தார்.
இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களின் கருத்தை 10.30 மணிக்குள் கேட்டு தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.