”பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்கிட பிறப்பித்த உத்தரவு ரத்து”- டெல்லி உயர்நீதிமன்றம்!
இந்திய பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த கடந்த 2016-ம் ஆண்டு ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின்பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இதனிடையே ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் 1978ல் பெற்ற பிஏ கல்வி சான்றிதழை வழங்க கோரி டெல்லி பல்கலைக்கழகத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்படவே மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா முறையிட்டார். இதனையடுத்து பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க தயார் என்றும், ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக ஆவணங்களை வழங்க முடியாது என டெல்லி பல்கலைக்கழகம் கூறியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமையை விட ஒரு தனிப்பட்ட நபரின் ஆவணங்களின் உரிமை உயர்வானது என்றதோடு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விரிவாக நடைபெற்று வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சச்சின் தத்தா இன்று தீர்பை வழங்கினார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.